பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானில் நடந்த மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
மாஸ்துங் நகரத்தில் நடந்த இத்தாக்குதலில் உள்ளூர் வேட்பாளரும் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, பண்ணு நகரத்தில் நடந்த இதே போன்றதொரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் நடந்த குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் வரும் ஜூலை 25 அன்று பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதற்கிடையில் பிரிட்டனில் இருந்து நேற்று பாகிஸ்தானுக்கு திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டார் .
அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்த நவாஸ் ஷெரீஃப் விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கினார்.
மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் கடந்த வாரம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]