கணவன் மனைவி இருவரும் ஒரே ராசி ஒரே நட்சத்திரக்காரர்களாக இருப்பதால் சனி பாதிப்பும், திசாபுத்தியால் ஏற்படும் பாதிப்பும் ஒன்றாகவே இருக்கும்.
மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி, மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் நீர் ராசிகள். நீரும் நெருப்பும் இணையாது. அதேபோல நிலத்தோடு காற்றும் இணையாது.
நெருப்போடு காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலவே இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாக இருக்கும்.
ஒரே ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால் எத்தனையோ பாதிப்புகள் ஏற்படும். எந்த ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொண்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.
மேஷம்:
செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இவர்கள் தான் செய்வதே சரி என்று நினைப்பவர்கள். உணர்ச்சி பூர்வமாகப் பேசி அறிவு பூர்வமாக முடிவெடுப்பவர்கள் இந்த ராசிக்காரர்கள். மேஷம் ராசியில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், தொடர் பிரச்னை, சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் அஸ்வினி நட்சத்திர ஆணும் பரணி நட்சத்திர பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் பாதிப்புகள் குறைவுதான். சிம்மம், தனுசு ராசிக்காரர்களுடன் திருமணம் செய்யலாம்.
ரிஷபம்
சுக்ரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இந்த ராசியில் உள்ள ஆணும், பெண்ணும் இணையும் போது இவர்களின் எண்ணங்கள், கருத்துகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். வாழ்க்கையை ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் வாழ்வார்கள்.
விடாமுயற்சியும், லட்சியத்தையும் நோக்கிப் பயணிப்பவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். ரிஷபம் ராசி உள்ளவர்களுக்கு, விருச்சக ராசிகாரர்களுடன் திருமணம் நடந்தால் காதல் இனிக்கும்.
மிதுனம்
புதனை ராசி நாதனாக கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று நினைக்கும் இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் உறவில் ஒருவித ஈர்ப்பு இருக்கும்.
மிதுனம் ராசிக்காரர்கள் துலாம், மேஷம், கும்பம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்து கொள்ளலாம். வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இன்று நல்லபடியாக இருக்கும்.
கடகம்
சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வுகள் அதிகமாகவே இருக்கும். கடக ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் உணர்ச்சிப்பூர்வமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஒருவர் மற்றொருவருடைய உணர்வைப் புரிந்து நடந்து கொள்வார்கள். வாழ்க்கை கரும்பாய் இனிக்கும். விருச்சிகம், ரிஷபம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும் பொருத்தமானவர்களே.
சிம்மம்
சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசி ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்களின் மத்தியில் முதலில் நிற்பது முன்கோபமாக தான் இருக்கும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாதவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்.
மனம் கவர்ந்தவர்களுக்கு மதிப்பை அள்ளித்தருவார்கள். ஒருவருக்கு ஒருவர் மதிப்பு அளிப்பது, பொறுமையுடன் வாழ்க்கை நடத்தினால் பிரச்னைகள் குறையும். துலாம், மேஷம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள்.
கன்னி
புதனை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்கள் கன்னி ராசிக்காரர்கள்.கன்னியில் புதன் உச்சமடைகிறார். சுக்கிரன் நீசமடைகிறார்.காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்கள் கன்னி ராசிக்காரர்கள் வசீகரமானவர்கள்.
இந்த ராசி கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஒருவருடைய மேன்மைக்கு மற்றொருவர் உறுதுணையாகத் திகழ்வார்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு மகரம், விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்கள் பொருத்தமாக இருப்பார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள். இந்த ராசியைக் கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் தங்களுக்குள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள்.
ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டால் இவர்களின் உறவில் பிரிவு உண்டாகாது. மிதுனம், சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள்.
விருச்சிகம்:
வீரமும், வேகமும் கொண்ட செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள் விருச்சிக ராசிக்கார்கள். இந்த ராசியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால், இவர்கள் இருவர் மத்தியில் ஈர்ப்பும், கவர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
ஆனால், இவர்களின் வாழ்வில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடகம், கன்னி, மகரம், மீனம் ராசிக்காரர்களுடன் இவர்கள் மண வாழ்க்கையில் இணையலாம்.
தனுசு:
குருவை ஆட்சி நாதனாகக் கொண்ட தனுசு ராசியில் பிறந்த ஆண் பெண் திருமண பந்தத்தில் இணையும் போது ஒற்றுமையாக காணப்படுவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விருப்புவார்கள். ஆரோக்கியமான விவாதம், உற்சாகத்துடன் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்கள்.
எடுத்த காரியத்தை திறமையுடன் முடிக்கும் தனுசு ராசிக்காரர்கள். நெருப்பு ராசிக்காரர்கள், நேர்மையானவர்கள்.மேஷம், துலாம், சிம்மம், கும்பம் ராசிக்காரர்களுடன் திருமண பொருத்தம் சரியாக இருக்கும்.
மகரம்:
சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் ராசியில் பிறந்த ஆண், பெண் திருமண பந்தத்தில் இணையும் போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வார்கள். இதனால் இவர்களின் உறவு சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்புடன் பணிகளை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள் மகர ராசிக்காரர்கள். காதல் உணர்வுகள் அதிகம் நிரம்பியவர்கள் இந்த ராசிக்காரர்கள். ரிஷபம், கன்னி, மகரம், மீனம் ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள்.
கும்பம்:
சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசியில் பிறந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் ஒருவரை ஒருவர் சகித்துக் கொண்டு வாழும் திறமை கொண்டவர்கள். அதிக அன்பானவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மேஷம், மிதுனம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள்.
மீனம்:
குருவை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள் மீன ராசிக்காரர்கள். சுக்கிரன் இங்கே உச்சமடைகிறார். மீன ராசியைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் தனித்துவம் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள். ரிஷபம், கடகம், விருச்சிகம், மகரம் ராசிக்காரர்களுடன் இவர்களுக்கு ஒத்துப்போகும்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]